விஸ்வரூபம் 2 கதை -நெட்டில் வெளியாகியதால் பரபரப்பு

Saturday, February 16, 2013
முஸ்லிம்களின் எதிர்ப்பு கிளம்பி இருக்காவிட்டால் விஸ்வரூபம் திரைப்படம் வெற்றிகரமாக ஒரு வாரத்தைத்தாண்டி ஓடியிருப்பதே கஷ்டம் என்றளவில்தான் விஸ்வரூபம்-1 இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


எனினும் எதைப்பற்றியும் கவலைப்படாத கமலஹாசன், "விஸ்வரூபம்-2 ஐ இந்த வருட இறுதிக்குள் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் 'தீவிரமாக' நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் முதல்பாகம்தான் சொதப்பி விட்டது என்பதால் இரண்டாம் பாகத்தையாவது சொதப்பாமல் எடுத்தால்தான் கமலஹாசன் இந்தியாவில் மரியாதையாக இருக்க முடியும். இல்லையெனில், எந்த நாட்டில் மரியாதை கிடைக்கிறதோ அங்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு கமலஹாசன் தள்ளப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 கதை
எப்படி இருக்கும் என்று ஓர் கற்பனை. ஜஸ்ட் ரிலாக்ஸ்!
****
வெற்றிகரமாக ஆப்கனானிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து உலகமகா அப்பாவி நாடான அமெரிக்காவைக் காப்பாற்றி விட்டு இந்தியாவுக்குத் திரும்பும் தவ்பீக் என்ற விசாம்(கமல்), இந்தியாவில் தீவிரவாதிகளை ஒடுக்கும் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார். பொறுப்பேற்ற விசாம், இந்தியாவில் என்னென்ன வகையான தீவிரவாதங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்து வைக்கத் திட்டமிடுகிறார்.

சேது சமுத்திரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கமலஹாசனை இலங்கை ராணுவத்தினர் திடீரென்று தாக்கி அவரது படகை சேதப்படுத்திவிட்டு, வலைகளையும் அறுத்து எறிகின்றனர். அப்போது நடுக்கடலில், கமலுக்கும் சிங்கள படையினருக்கும் இடையில் நடக்கும் பயங்கர சண்டையின்போது கமல், புத்தம்-சரணம்-கச்சாமி என்று ஜெபித்தபடி சிங்களப்படையினரை அடித்து நொறுக்கிய கையோடு, அவர்களது படகிலேயே ஏறி இலங்கைக்குச் செல்கிறார்.

இலங்கையில் தலைமறைவாக இயங்கிவரும் ஓரிரு விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து கொண்டு ராஜபக்சேயை அடக்க திட்டமிடுகிறார். பெயரை மாற்றி புத்த துறவியாக மாறி சிங்களர்களின் அபிமானத்தைப்பெற்று உள்ளாட்சி தேர்தலில் கவுன்ஸிலராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். காவியுடை தரித்த புத்ததுறவியாக இருந்தபோதும், கேபரே, டிஸ்கோ நடனப் பயிற்சிகளும் வழங்குகிறார். படிப்படியாக கொழும்பு நகர மேயராகி விடுகிறார். பகலில் விடுதலைப்புலியாகவும், இரவில் சிங்கள துறவியாகவும் மாறிமாறி நடித்து ராஜபக்சே மற்றும் பிரபாகரனின் நட்பைப் பெறுகிறார்.

இந்நிலையில், வடகிழக்கு இந்தியாவில் நக்சல் தீவிரவாதிகளை ஒடுக்கும் 'ஆப்ரேசன் ரெட்கிரீன்' ஐ நடத்தப்போவதாக ரகசிய தகவல் கமலுக்குக் கிடைக்கிறது. எவ்வித நீச்சல் உபகரணங்களும் இன்றி இலங்கையிலிருந்து கடலில் நீந்தியபடி இந்தியாவிற்கு வரும்போது சுனாமி ஏற்படுகிறது. சுனாமி அலைகளால் சுருட்டிச் செல்லப்பட்டு வங்கதேசத்தில் கரை ஒதுங்குகிறார். கடற்கரையில் மயங்கிக் கிடக்கும் கமலை, பங்களாதேஷ் ராணுவம் சிறைபிடிக்கிறது.

பங்களாதேஷ் ராணுவத்திடம் வங்கமொழியில் தனது கதையைச் சொல்கிறார். வங்கமொழியினைச் சரளமாக பேசும் கமலை ஆச்சரியத்துடன் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஃப்ளாஸ்பேக் விரிகிறது. விஸ்வரூபம்-1 இல் அமெரிக்காவைக் காப்பாற்றும்போது மேற்கு வங்கத்தைச் சார்ந்த முகர்ஜியுடன் கிடைத்த நட்பால் வங்கமொழியைக் கமல் கஷ்டப்பட்டு கற்றுக்கொள்ளும் காட்சி ஃப்ளாஷ்பேக்கில் காட்டப்படுகிறது.

ஏற்கனவே பங்களாதேஷில் செயல்பட்டுவரும் ஹூஜி, சாஜி தீவிரவாத அமைப்பையும் ஒழித்துக்கட்டி உதவும்படி அந்நாட்டு பிரதமர் கமலிடம் கோரிக்கை வைக்கிறார். தற்போதைக்கு இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளை ஒடுக்கிவிட்டு விஸ்வரூபம்-3 இல் பங்களாதேஷ் தீவிரவாதிகளை ஒடுக்க வருகிறேன் என கமல் சொல்லவே, வங்கப் பிரதமர் அதற்கு ஒப்புக்கொண்டு கமலை ராஜமரியாதையுடன் இந்தியாவுக்குத் தனி விமானத்தில் அனுப்பி வைக்கிறார்(அந்த விமானத்தைக் கமலே ஓட்டி வருகிறார்).

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாத அமைப்பினருடன் பழகி, அருணாச்சலப் பிரதேசம் வழியாக சீனாசென்று சீன தற்காப்பு பயிற்சிகள் அனைத்தையும் பயின்று ஆயுதத்துடன் வருகிறார். இந்நிலையில் நக்சலைட் தீவிரவாதிகளைவிட மும்பையில் காவித்தீவிரவாதம் தலைவிரித்தாடுவதைக் கண்டு, முதலில் காவித்தீவிரவாதிகளை ஒழிக்க 'ஆப்ரேசன் சஃப்ரான்' ஐச் செயல்படுத்துகிறார்.

காவி தீவிரவாதிகள் குறித்து உள்துறை அமைச்சர் கொடுத்த அடையாளங்களுடன் இந்தியாவில் அலைந்து திரிகிறார். குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காவித்தீவிரவாதிகள் சர்வசாதாரணமாக இயங்கிவருகின்றனர். இந்நிலையில் மும்பையில் காவித்தீவிரவாத சர்வதேச தலைவர் பபூன் தொக்குடியா மற்றும் குஜராத் காவித்தீவிரவாத தலைவர் கஜேந்திரகேடி ஆகியோரிடையே பிரதமர் பதவிக்குப் போட்டி ஏற்படுகிறது.

கஜேந்திரகேடி குஜராத்தில் அட்டூழியங்கள் பலசெய்து முதல்வராகிவிடுவதால், பிரதமர் பதவிக்குரிய தகுதி அவருக்கே இருப்பதாககூறி அவரையே நிறுத்தலாமென காவித்தீவிரவாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், சர்வதேச காவித்தீவிரவாத தலைவர் பபூன் தொக்குடியாவுக்கு இது பிடிக்கவில்லை. இதனால் ஐதராபாத்தில் மத வன்முறையைத் தூண்டி, சார்மினார்மீது கரசேவை செய்து இடித்து தரைமட்டமாக்கத் திட்டம் இடுகிறார். இதனைத் தெரிந்துகொண்ட கமலஹாசன் பபூன் தொக்குடியாவின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கி விட்டதால் தேசியளவில் பிரபலமடைகிறார். இதற்கிடையில், கமல் ஒரு முஸ்லிம் என்பதால் அப்பாவி இந்துத்துவவாதிகளை அழிப்பதற்காக முஸ்லிம் தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்த வேலையைச் செய்தார் என்ற குற்றச்சாட்டை பூஜகவினர் எழுப்புகின்றனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் கமல், தான் ஒரு இந்துதான் என்றும் தன் உண்மையான பெயர் விஸ்வநாதன் என்றும் கஷ்மீரில் முஸ்லிம் தீவிரவாதிகளை அழிப்பதற்காக முஸ்லிம் பெயரில் கஷ்மீருக்கு இந்திய உளவுத்துறை அனுப்பியதாகவும் ஃப்ளாஷ்பேக் மூலம் விவரிக்கிறார். நீதிமன்றம் அவரைப் பாராட்டி விடுதலை செய்வதோடு, ஆஸ்கார் விருதுக்கு அவர் பெயரைப் பரிந்துரைக்க அரசுக்கு உத்தரவிடுகிறது.

கொங்கிரஸ்மீது கடுப்பிலுள்ள இடதுசாரிகள், பூஜகவில் கேடியைப் பிரதமர் பதவிக்கு நிறுத்தியிருப்பதால் ஆதரிக்க முடியாமல் தவிக்கிறார்கள். உடனே காம்ரேடுகள், லாலு பிரசாத் யாதவ், முலாயம்சிங், பரூக் அப்துல்லா ஆகியோர் ஆதரவுடன் மூன்றாம் அணி அமைத்து கமலை பிரதமர் வேட்பாளராக நிறுத்துகிறார்கள். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, மூன்றாம் அணியின் சார்பாக ஒருங்கிணைந்த கொம்யூனிஸ்ட் கட்சிகளின் முதல் இந்திய பிரதமராகும் கமல், பதவியேற்பின்போது "தீவிரவாதத்தை ஒழிப்பதே தனது முதல்வேலை" என்று வீர உரையாற்றி பிரதமர் பதவி வேண்டாம் என உதறிவிட்டு நான்கு அரை டவுசர் லேடிகள் சூழ பங்களாதேஷில் விஸ்வரூபம் மூன்றாம் பாகம் தொடரும் என்ற அறிவிப்போடு பங்களாதேஷ் செல்கிறார்.



விஸ்வரூபம் தொடர்பான வேறு சில பதிவுகள்:

விஸ்வரூபம் படம் முஸ்லிம்களுக்கு விடப்பட்ட சவால்-முஸ்லிம்களே அணி திரள்வீர்(video attached)



இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment